பொன்னர் சங்கர் - பிரம்மாண்டமாய்
படம் பார்க்க செல்பவர்களுக்கு திரையில் ஆச்சரியம் காத்திருக்கிறது என்றே சொல்லலாம். காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம்! பல கோடிகளை தண்ணி மாதிரி இரைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. கலைஞரின் எழுத்தில் உருவாகியிருக்கும் இந்த அண்ணன்மார்கள், ஒட்டுமொத்த தமிழ்சினிமாவையே பிரம்மிக்க வைக்கிறார்கள் என்பது நிஜம் !
விஷ்வல் எஃபெக்ட்ஸ் + கிராஃபிக்ஸ் பொன்னர் சங்கரை இன்னும் கூடுதல் பிரம்மாண்டம் சேர்த்திருக்கிறது. கதையின் காட்சியும் அதற்கேற்ற காட்சியமைப்பும் அதோடு கலந்து ஒலிக்கும் இசையும் என பொன்னர் சங்கர் சபாஷ் வாங்குகிறார்கள்.
நெல்லையன் கொண்டான் (ஜெயராம்) மீது காதல் கொள்ளும் தாமரை (குஷ்பு) அப்பாவால் நாட்டை விட்டே துரத்தப்படுகிறாள். இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள்தான் பொன்னர் சங்கர். (பிரஷாந்த்+பிரஷாந்த்) ஆனால் தன் மகன்கள் உயிரோடு இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள் இருவரும். ஆனால் ராக்கி அண்ணனால் (ராஜ்கிரண்) ரகசியமாக வளர்க்கப்படும் இவர்கள், தங்களை அழிக்க நினைத்த மந்தியப்பன் (பிரகாஷ்ராஜ்) காளி மன்னன் (நெப்போலியன்) ஆகிய இருவரையும் கொன்றொழிப்பதும், மாமன் மகள்களை கை பிடிப்பதும்தான் கதை.
தமிழ் சினிமா எத்தனையோ ஹீரோக்களின் அறிமுகக் காட்சியை பார்த்திருக்கிறது... ஆனால் அவை அனைத்திலும் தனித்துவம் வாய்ந்தது பொன்னர் சங்கரில் பிரஷாந்த் + பிரஷாந்த் அறிமுகமாகும் காட்சி. அடுத்த காட்சி அணையை உடைத்து ஊர் மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடும் சண்டைக் காட்சி. பலே! சண்டையில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும் டபுள் ஆக்ஷனில் ஒரே பிரேமில் எதிரிகளை பிரஷாந்த்’ஸ் தொம்சம் செய்வது டெக்னிகலாக வியப்பு.
பிறகு காதலிகளை காப்பாற்றும் படலம். ஒரு ஹீரோயின் மலைப் பாம்பிடம் சிக்கிக் கொள்ள இன்னொரு ஹீரோயின் முதலையிடம் சிக்கிக் கொள்கிறார். ஒரு பிரஷாந்த் பாம்பிடமும் இன்னொருவர் முதலையிடமும் போராடி ஜெய்க்கிறார்கள். ( அது உண்மையான பாம்பும் முதலையும் என்று பிரஷாந்த் பத்திரிக்கையாளர்களிடம் சொன்னதும் எல்லோருக்குமே கண்கள் கொஞ்சம் விரிந்தது )
பிறகு காதல் பயணங்கள், போர்க்கள காட்சிகள் என கதை நகர்கிறது. போர்க்களத்தில் விஜயகுமாரை பிரஷாந்த் சிரிக்க வைப்பது எதிர்பார்க்காத ஒன்று. ராஜ்கிரண் மார்பில் அம்புகளை தாங்கியபடி நடந்து வருவது உச்சகட்ட நடிப்பு. நெப்போலியன் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது உருக்கம்.
ஸ்னேகா நான்கு காட்சிகளுக்கு வந்தாலும் அளவான அம்சமான நடிப்பு, ஆனால் முகத்தில் முதிர்ச்சி. முதல் பாடலுக்கு மட்டும் பாணு வருகிறார். கடைசி க்ளைமாக்சில் பிரபு வருகிறார். ஒரே காட்சியில் சீதா! இப்படி சிரிய காட்சிகளுக்கு கூட பெரிய ஆர்டிஸ்டை நடிக்க வைக்கும் பெரிய மனசு தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு!
இசை இளையராஜா - கேட்கவா வேண்டும்! இசைக்கு பஞ்சமில்லை. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பம். இதையும் பிரஷாந்த்தே கவனித்திருப்பதுதான் வியப்பு. நவீன இயக்குனரான ஷங்கருக்கே சவால் விட்டிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாருக்கு பாராட்டுகள் நிச்சயம்.
கொங்கு நாட்டின் கொஞ்சும் தமிழில் பிரஷாந்த் வசனங்களை அள்ளித் தெரிப்பார் என்று நினைப்பவர்களுக்கு ஏமாற்றமே. ஆனால் போர்க்களத்தில் பிரஷாந்தின் வாளும் வேலும் நன்றாகவே பேசுகிறது! ம்...
பொன்னர் ஷங்கர் இத்தனை வருட தமிழ்சினிமாவின் மிக முக்கியமான படம் என்ற முத்திரையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்த புகழ் தயாரிப்பாளர் இயக்குனர் தியாகராஜனுக்கே சேரும்.
பொன்னர் சங்கர் - பிரம்மாண்டமாய்